September 12, 2007

இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மக்களிடம் விற்பனை செய்யும் அரசியல்:

படுபாதகமான விளைவை இந்தியமக்கள் மீது ஏற்படுத்தப்போகும் இந்திய - அமெரிக்க 123 ஒப்பந்தத்தை இந்திய மக்களிடம் சாதுர்யமாக விற்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நமது வெளிநாட்டு கொள்கையின் சுயசார்பு போய்விடும் என்பது ஒருபுறமிருக்க, அணுசக்தி ஆராய்ச்சியில் நமது முன்னேற்றம் நின்றுபோய்விடும் என்பதும் பல்வேறு துறைகளில் நமக்கு சார்பு நிலை ஏற்படும் என்பதும் இன்னொருபுறமிருக்க,நமக்கு கடுமையான பொருளாதராச் சுமையினை ஏற்படுத்தப் போகும் இலகுநீர் அணுஉலை (Light Water Reactor) ஏற்றுமதிக்காக அமெரிக்க அணுஉலை தயாரிப்பாளர்கள் சப்புக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் ஒரு என்ரான் அரங்கேறப் போகிறது! என்ரான் அவலத்திலிருந்து இந்தியா தப்பியதற்கு காரணமே இந்தியாவின் அதிர்ஷ்டம் மட்டுமே! ஏனென்றால், என்ரான் நிறுவனம் ஆக்ரோஷத்துடன் இந்தியாவை விழுங்கத் தோளையும் தொடையையும் தட்டி சிலாவரிசை எடுத்து வந்தபோது அதனுடைய உள்நோயால் திடீரென்று மாண்டுவிட்டது. இலகுநீர் அணு உலை இறக்குமதி செய்து இந்தியா போண்டியாகும்போது எதிர்காலத்தில் மீண்டும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்காது. நாட்டை போண்டியாக்கும் என்ரான் ஒப்பந்தத்தை, நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்ட மான்டேக்சிங் அலுவாலியா தலைமையில் இருந்த அதே அதிகாரிகள் படையும் மன்மோகன்சிங் தலைமையில் இருந்த அதே அரசியல்வாதிகள் படையும் இன்று இந்தோ-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மக்களிடம் விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருகிறது. மக்களின் நினைவாற்றல் மிகக்குறைவு என்ற நப்பாசையிலும், பலவிஷயங்களைக் கொட்டி என்ரான் குளறுபடியை மூடிவிட்டதாக கற்பனை செய்வதனால், மீண்டும் என்ரானை மக்களின் நினைவுக்கு கொண்டுவர ஒரு சில வெளியீடுகளை அடுத்தடுத்து கொண்டுவர சல்லடை முடிவெடுத்திருக்கிறது

No comments: