September 21, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-3

ஒப்பந்தம் அரபிக்கடலுக்கு போனதா?

அரபிக்கடலில் ஒப்பந்தத்தை தூக்கி எறிவேன் என்று கூறி 1994ல் ஆட்சி வந்த சிவசேனா-பாஜக அரசானது என்ன செய்திருக்க வேண்டும்? ஓராண்டு மட்டுமே நடைபெற்ற கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவு போட்டிருக்க வேண்டும். மாறாக வேலைகள் நடைபெறுவதை அனுமதித்தது. பிறகு ஓராண்டு கழித்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கூறி மறுபேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பேச்சு வார்த்தை முடிவில் முதல் கட்டம் மட்டுமல்ல இரண்டாம் கட்டத்திற்கும் அனுமதி வழங்கியது. பேச்சு வார்த்தைக்குப்பின் இரண்டாம் கட்டத்திற்கு 1200 கோடி ரூபாய் குறைத்ததாக கூறியது. முதல் கட்டத்தின் 695 மெவாட் மின் உற்பத்தி திறன் 826 மெ வாட் திறனாக உயர்த்தப்பட்டதாக பேசப்பட்டது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்படவிருந்த இழப்பு குறைக்கப்பட்டது என்று கூறியது.

என்ரான் ஒப்பந்தம் மூலமாக காங்கிரசு அரசு ஊழல் செய்து விட்டது என்று மகாராஷ்ட்ர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக, அதிகாரம் கையில் வந்தவுடன், இந்திய அரசியல்வாதிகளுக்கு கையூட்டு செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதே என்ரானுடன் மறு ஒப்பந்தம் செய்தது பாஜக. மறுபுறம் என்ரான் நிறுவனமானது இத்திட்டத்தைப் பற்றி இந்திய அதிகாரிகளுக்கும் முடிவெடுப்பவர்களுக்கும் கல்வியூட்டிய வகையில் செலவு 20 மில்லியன் டாலர் என்று கணக்கெழுதியது; பாஜக தலைவர் அத்வானியும் என்ரான் வியாபாரப் பள்ளியைப் (Enron School of Business Management) பாராட்டிப் பேசினார்.

13ம் நாள் கூத்து

இது ஒருபுறமிருக்க, கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும்போது மின் கொள்முதல் ஒப்பந்தத்தையும் அதற்கான ஒப்புதலையும் மத்திய அரசுவழங்கவேண்டும் என்று முதல் ஒப்பந்தத்தில் உள்ளது. இது மட்டுமல்ல, என்ரானுக்கு மகாராஷ்ர அரசிடமிருந்தோ, மின்வாரியத்திடமிருந்தோ ஏதாவது தொகை நிலுவையில் இருந்தால், அதை மத்திய அரசு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கிவிட்டு மகாராஷ்ட்ரா அரசுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய வேறு நிதியிலிருந்து பிடித்துக் கொள்ளலாம் என்ற மறுபிணை ஒப்பந்தத்தை (Counter Guarantee) மத்திய அரசு என்ரானுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதிருந்தது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாமல் 1996ல் வெறும் 13 நாட்களே ஆட்சி செய்த பாஜக அரசாங்கமானது 13ம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் நடந்த அன்று உணவு இடைவேளையின்போது மந்திரிசபையைக் கூட்டி இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. முதலாவது, தீர்மானம் என்ரான் மறுபிணை ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது. இரண்டாவது பெரும்பான்மையில்லாததால் ராஜினாமா செய்வது. ஆக, இன்று 123 ஒப்பந்தத்தை எதிர்க்கிறேன் என்று பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவிடாமல் மூன்று நாட்கள் சபையை முடக்கியவர்களின் நோக்கம் என்ன என்பது என்ரான் விஷயத்தில் இவர்களின் நடத்தையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மோசடி பேச்சுவார்த்தை!

மறுபேச்சுவார்தைக்குப்பின் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது. மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு ஆண்டிற்கு 600 கோடியிலிருந்து 550 கோடியாக குறைந்தது போல் தோற்றம் ஏற்பட்டாலும் எரிபொருள் விலையேற்றத்தால் இதைவிட அதிகமான இழப்பே ஏற்படும். முதல் கட்ட மின்உற்பத்தித் திறனை அதிகரித்தாக கூறியதும் கணக்கில் தில்லுமுல்லு செய்து காட்டப்பட்டதே. இதுவும் கூட இருசக்கர வாகனங்கத்தை விற்பனை செய்யும் போது லிட்டருக்கு 100 கிமீ ஒடும் என்று விளப்பரம் செய்வதைப் போன்றதாகும். ஆனால் என்ரானுக்கு கிடைத்த மேலதிக சலுகை என்பது 83 சதவீத மின் கொள்முதலுக்கு ஒப்புக் கொண்டதே. முந்தைய ஒப்பந்தத்தில் 40 சதவீதம் கொள்முதல் செய்தால் விடுபட்ட 43 சதவீத மின்சக்தியை உற்பத்தி செய்திருந்ததால் கிடைக்கும் லாபத்தை மட்டும் தண்டமாக கொடுக்க வேண்டும் ஆனால் சிவசேனா ஒப்பந்தத்தில் 43 சதவீதத்திதையும் உற்பத்தி செய்தாக கணக்கிட்டு முழுத்தொகையையும் கொடுக்க வேண்டும். இதைத்தவிர மின்வாரியம் 720 கோடி பங்கு மூலதனம் செலுவத்துவதை பெற்றதாக பெருமையுடன் கூறினார்கள் ஆனால் இந்த 720 கோடியை வைத்து 70:30 என்ற ஈவுக்கடன் பெற்று 2400 கோடியில் மொத்த மின்திட்டத்தையும் நிறைவேற்றியிருக்கலாம். மொத்தத்தில், மின் கொள்முதல் விலையில் எந்த மாறுதலும் இல்லை! எரிபொருள் இறக்குமதியிலும் எந்த மாறுதலும் இல்லை! பணம் டாலரில் செலுத்த வேண்டும் என்பதிலும் மாறுதல் இல்லை! விலை நிர்ணயிப்பு கொள்கையிலும் மாறுதல் இல்லை! ஆலை இயங்குபாரத்திலும் எந்த மாறுதலும் இல்லை! ஆனாலும் மறுபேச்சு வார்த்தையில் மின்வாரியத்திற்கு லாபமேற்பட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டது. கட்டுமானப்பணிகள் தொடர்ந்தன. பிறகென்ன மின்வாரியம் போண்டியாக வேண்டியதுதான்! மின்வாரியம் எப்படி பாதாளத்திற்குள் சென்றது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

No comments: