September 18, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-2

புதிய மின்சக்தி கொள்கை:

என்ரானுக்காக மத்திய மின் உற்பத்தி சட்டம் திருத்தப்பட்டது. மின் உற்பத்திக் கொள்கைகளை திருத்துவதற்காக மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அக்குழுவின் தலைவர் டாக்டர் ரெயின்ஹார்ட் என்பவர். உலகில் மொத்தமுள்ள ஆறு மின் தளவாட உற்பத்தியார்களில் ஒன்றான சீமென்ஸ நிறுவனத்தின் இந்திய அதிகாரியே ரெயின்ஹார்ட். இவர் கூறிய பரிந்துரைகள் தனியார் மயத்திற்கு சாதகமாகவே அமையும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டாம். கீழ்க்காணும் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. உலகிலுள்ள மின்தளவாட உற்பத்தித் திறனானது ஆண்டிற்கு 1,25,000 மெ வாட் திறனுற்ற ஆலைகள் அமைப்பதிலிருந்து 1,50,000 மெ வாட் திறனுற்ற ஆலைகள் அமைப்பது வரை. ஆனால் ஆண்டிற்கு தேவைப்படும் மின் உற்பத்தி தளவாடங்கள் 5000 மெ வாட்டிலிருந்து 10000 மெ வாட் வரைதான். இதில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கணிசமான பங்கு உண்டு. சீனா தன்னுடைய சாதகமான நிலையைப் பயன்படுத்தி கடுமையாக பேரம் நடத்தி விலைகுறைப்பை ஏற்படுத்தும் போது இந்தியா அன்னிய மின் தளவாட உற்பத்தியாளர்களுக்கு வேட்டைக் காடாக மாறிவிட்டது.

ஒருவழியாக மின்உற்பத்தியில் தனியார் அனுமதிக்கப்பட்டது. தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் மின்சக்தி கொள்கை மாற்றப்பட்டது.

• தனியார் இடும் மூலதனத்திற்கு 16 சதம் லாபம் உத்தரவாதம்
• நீண்டகால வரி விடுமுறை
• கணக்கில் காட்டப்படும் தேய்மானம் 3.5 சதத்திலிருந்து 8.24 சதமாக உயர்வு
• அன்னியச் செலவாணி தடுமாற்றத்திலிருந்து பாதுகாப்பு
• தனியாக மின்கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchase Agreement). இதில் நிரந்தர மூலதனத்தின் வட்டி, திருப்பி செலுத்துதல், இயங்கு மூலதனத்தின் வட்டி மற்றும் லாபம் ஆகியவை தனித்தனியாக உள்ளடக்கப்பட வேண்டும்
• எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி
• மின்சாரம் உற்பத்தியும் நுகர்வும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதால் தேவையில்லாத நேரத்தில் கூட ஆலையை இயக்கி இயங்குதிறனில் அதிக அளவு வரும் அளவிற்கு மின்சாரம் வாங்க வேண்டும்.

இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் என்ரான் ஒப்பந்தம் போடப்பட்டது. இதே போன்று சில கொள்கைகள் அணுமின்நிலைய தனியார்மயம், அணுஉலை இறக்குமதி, எரிபொருள் வழங்கல் போன்றவைகளுக்கும் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் இந்த கொள்கைகளை மீறி மேலும் சில சலுகைகள் என்ரானுக்கு வழங்கப்பட்டது. அது என்னவென்று பார்ப்போம்.

என்ரானின் மின்கொள்முதல் ஒப்பந்தம்:

என்ரானுக்கு 31 சதம் லாபம் உத்தரவாதம் தரப்பட்டது. 16 சதம் நேரடியான லாபம், 15 சதம் ஆலை இயங்குபார ஊக்கத்தொகை (Plant Load Factor) ஆகிய வடிவில் 31 சதமாக்கப்பட்டது. ஐந்து வருடத்திற்கு வரி விடுமுறை. மின்கொள்முதல் அன்னியச் செலவாணியில் கொடுக்க வேண்டும். மின் உற்பத்தி செய்வதற்கு கிராக்கியான எரிபொருளான எரிவாயுவைப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் அதிக இயக்கச் செலவையும் மராட்டிய அரசுதான் கொடுக்க வேண்டும். இதையேதான் என்ரான் செய்தது. சர்வதேச சந்தையில் பீப்பாய் 10 டாலருக்க விற்றுக் கொண்டிருந்த கச்சா எண்ணெயின் விலை 30டாலராக உயர்ந்த பொழுது 3 மடங்கு என்ரான் மின்சாரத்திற்கு விலை கொடுக்க வேண்டியதிருந்து. இதன் விளைவாக என்ரான் மின்சாரத்தின் விலை ரூ3 லிருந்து ரூ4 ஆக ஆகிவிட்டது. டாலர் மதிப்பு 31.50 இருந்தபொழுது போட்ட ஒப்பந்தம், டாலர் மதிப்பு 40 ரூபாயாக உயர்ந்த பொழுது அதற்கும் சேர்த்து மின்சக்தி விலை கொடுக்க வேண்டியதிருந்தது.. 2002ல் டாலர் மதிப்பு உயர்ந்ததன் விளைவாக இது ரூ5 லிருந்து ரூ 7 ஆக உயர்ந்து விட்டது.மராட்டிய அரசின் இதர மின்நிலையங்கள் 60 சதத்தில் இயக்கும் பொழுது என்ரானுக்கு 83 சதம் இயக்கி அதன் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்றும் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. பொதுவாக எந்தவொரு தொழிலின் லாப நட்டத்தை அதன் திறமையும் சந்தையுமே தீர்மானிக்கும், அரசு தலையிடக்கூடாது என்ற சந்தைப் பொருளாதார சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்று அரசு தலையிட்டு 31 சத லாபம் உத்தரவாதம் செய்வதுதான் பெரிய நகைமுரண்.

இப்படிப்பட்ட மோசடியான விஷயத்தை என்ரான் எதிர்ப்பாளர்கள் மக்களிடம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரசாரம் முழுவீச்சில் நடைபெற்றது. மகாராஷ்ட்ர தேர்தல் வேறு நெருங்கி வந்தது. உடனே எதிர்க்கட்சிகளான பாஜகவும் சிவசேனாவும் களத்தில் குதித்தன. ஆட்சிக்கு வந்த உடனே என்ரான் ஒப்பந்தத்தை அரபிக்கடலில் வீசி எறிவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சேர்த்தனர். தேர்தலிலும வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். ஓப்பந்தம் அரபிக்கடலுக்கு போனதா? அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

2 comments:

cosmo said...
This comment has been removed by a blog administrator.
Vijayan said...
This comment has been removed by the author.