September 15, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-1

ட்ராஜன் குதிரை:
இந்த இரு ஒப்பந்தங்களுக்கும் ஒத்த தன்மைகள் பல உள்ளன. இன்னும் சொல்லப் போனால் 1991ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சக்தி உற்பத்திக் கொள்கைக்கும் 123 ஒப்பந்தத்திற்கும்தான் ஒத்த தன்மைகள் உள்ளன. ஏனென்றால் முதலாவது விஷயம் என்ரான் ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது. இரண்டாவது அதைப் போன்று இன்னொன்று வரவிருப்பதை அறிவிக்கிறது.

கிரேக்க புராணக்கதையான இல்லியட்டின் ஒரு சம்பவத்தை நினைவு கூறுவது நல்லது. ஜீயெஜ் என்ற கடவுளானவர் தன்னுடைய மகளான காஸண்டிரியாவிற்கு நடக்ககூடியதை முன்கூட்டியே கூறும் ஆற்றல் உண்டாகட்டும் என்ற ஒரு வரம் கொடுத்தார். ஆனால் ஜீயெஜின் மனைவி ஹீரா, அதாவது காஸண்டிரியாவின் அம்மா ஒரு சாபம் கொடுத்தார். அதாவது நடக்கக் கூடியதை முன்கூட்டியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதே! ட்ராய் என்ற பொய்க்கால் குதிரைக்குள் எதிரிகள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து காஸண்டிரியா சொன்னாலும் அதை நம்பாத ட்ராஜன்கள் அதனுள்ளே சென்று மாண்டார்கள். இதுதான் என்ரான் விஷயத்தில் நடந்தது. என்ரான் ஒப்பந்த எதிர்ப்பாளர்களுக்கு காஸண்டிரியா நிலமை ஏற்பட்டது. அவர்கள் 1992ல் கூறியதை யாரும் நம்பவில்லை. 2001ல் உண்மை என்று நிரூபணம்ஆகிவிட்டது.

நாய்வாலை நறுக்கி சூப்பு போட்டு நாய்க்கே கொடுத்தது:

1980களில் வேகமடைந்த ரீகனாமிக்ஸின் விளைவாக தனியார்மயம் சூடுபிடித்தது. மின்சக்தி உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவை தனியார்மயத்திற்கு உட்படுத்தப்பட்டது. மின்சக்தி உற்பத்தியாளர்கள், மின் விநியோக ஏற்பாடு உடையவர்கள், விநியோகிப்பவர்கள் ஆகிய முவருக்கும் தனியார்கள். விநியோகிப்பவர் என்பவர் வெவ்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் மின்சக்தியை ஒப்பந்தம் மூலமாக மொத்தமாக வாங்கி நுகர்வோருக்கு சில்லரை விலையில் விற்பவர். நம்மவூர் மருந்துக்கடைக்காரருக்கு மருந்து உற்பத்தி பற்றி எவ்வளவு அறிவு இருக்குமோ அதே அறிவுதான் மின் விநியோகிப்பாளருக்கு மின் உற்பத்தியைப்பற்றிய அறிவு இருக்கும்.அன்று மின்சக்தி விநியோகிக்கும் நிறுவனமாக முளைத்ததுதான் என்ரான். வெகுவேகமாக என்ரான் வளர்ந்ததற்கு காரணம் அது மின்சக்தி விநியோகித்தில் ஊகவணிகமுறையை (Speculation) புகுத்தியதே. ஃப்யூச்சர் என சொல்லப்படும் ஊகவணிக முறையில் மின்சக்தியை உற்பத்தியாளர்களுடன் எதிர்கால விலை ஒப்பந்தத்தைப் போட்டு லாபம் சம்பாதித்தது. என்ரானுக்கு எந்தவித மின் உற்பத்தி அனுபவமும் கிடையாது.

இப்படிப்பட்ட மகானுபாவனுடன்தான் மன்மோகன்சிங் (மத்திய நிதியமைச்சர்), சால்வே (மின்துறை அமைச்சர்), அலுவாலியா (மத்திய நிதிச் செயலர்) ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சரத்பவாரின் மகாராஷ்டிர அரசு ஒப்பந்தம் செய்தது. இது எரிவாயுவை பயன்படுத்தி 2015 மெ வாட் மின்நிலையத்தை மகாராஷ்டிர மாநிலம் தபோலில் அமைக்கும் ஓப்பந்தம். மின்நிலையத்தின் மொத்த விலை 2850 மில்லியன் டாலர். இதில் 2000 மில்லியன் டாலர் இந்திய நிதி நிறுவனங்களான IDBI, IFCI, SBI ஆகியவை கடனாகக் கொடுக்கும். 910 மில்லியன் டாலர் செலவில் முதல் கட்ட மின்நிலையம் உருவாகும். என்ரானுக்கு மின் உற்பத்தி அனுபவம் இல்லாதால், மின்நிலைய உபகரணத் தயாரிப்பாளரான GEக்கு10 சதவீத பங்கும், மின்நிலைய வடிவமைப்பாளரான Bechtel நிறுவனத்திற்கு 10 சதவீத பங்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆக யாருக்கும் மின் உற்பத்தி நிலையம் நடத்திய அனுபவம் கிடையாது. முதல் கட்ட 910 மி டாலரில் 200 மி. டாலர் என்ரான் பங்கும் இந்திய நிதி நிறுவனங்கள் 710 மி டாலர் கடன் கொடுக்கும் ஆனால் மொத்த ஆலைக்கான வடிவமைப்புச் செலவான 280 மி டாலர் ஒப்பந்தம் போட்டவுடனே எடுத்துக் கொண்டுவிடும் ஆக மொத்தம் கையெழுத்தானவுடன் 80 மி டாலர் வரவு. அதாவது 252 கோடி ரூபாய் லாபம் ஒன்றும் கொடுக்காமலேயே! நமக்கு மின்உற்பத்தி செய்து விற்பதற்கு சொந்த முதலீட்டில் மின் உற்பத்தி நிலையம் என்று கூறி ஒப்பந்தம் போட்டு 252 கோடி சம்பாதித்தது என்ரான். நாய் வாலை நறுக்கி நாய்க்கே சூப்பு போட்டு கொடுத்த கதைதான் இது. இந்த ஒப்பந்தத்தின் மற்ற பகுதிகள் எவை? ஓப்பந்தம் எவ்வாறு அமலானது என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

No comments: