September 25, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-4

என்ரானை கையாண்ட மூன்றாவது மகாராஷ்ட்ர அரசு

மன்மோகன்சிங் 1991ல் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக மின்உற்பத்தி தனியார்மயமானது. இதையொட்டி மின் உற்பத்தி செய்ய தனியார்களை அனுமதிக்கும் வேகப்பாதை திட்டங்கள் (Fast Track Projects) ஆறு உருவாயின. அதில் ஒன்று தபோல் மின்திட்டம். இது என்ரான் நிறுவனத்துடன் சரத்பவார் தலைமையிலான மாநில காங்கிரஸ அரசாங்கம் செய்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தையே அடித்தளமாகக் கொண்டு 1993ல் திருத்தப்பட்ட இந்திய மின்சார சட்டம். என்ரான் ஒப்பந்தத்தின் விளைவாக அதிக விலை கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை இறக்குமதி செய்வது. அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக விலைகொடுத்து மகாராஷ்ட்ர மின்வாரியம் வாங்குவது ஆகியவை விரைவில் மின்வாரியத்தை போண்டியாக்கிவிடும் என்று கூக்குரல் எழுந்ததால், எதிர்கட்சியான சிவசேனாவும பாஜகவும் ஒப்பந்தத்தை அரபிக்கடலில் வீசியெறிவோம் என்று முழக்கமிட்டு 1994ல் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் ஒப்பந்ததத்தை ரத்து செய்யவில்லை முதல் கட்ட பணிகள் நடைபெறுவதற்கு அனுமதித்துவிட்டு 1995ல் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் முதல் கட்டம் மட்டுமின்றி இரண்டாம் கட்டத்திற்கும் அனுமதி வழங்கினார்கள். மின்கொள்முதல் ஒப்பந்ததத்திலும் எந்த மாறுதலும் செய்யவில்லை. இத்துடன் இவர்கள் ஆட்சியும் முடிந்து போயிற்று என்ரானின் முதல் கட்ட மின்நிலைய கட்டுமானப் பணிகளும் முடிந்து போயிற்று. என்ரான் மின் உற்பத்தியும் துவங்கியது. என்ரானின் மீட்டர் நாலுகால் பாய்ச்சலில் ஓடத்துவங்கியது. 1999ல் விலாஸராவ்தேஷ்முக் தலைமையில் மீண்டும் காங்கிரஸ அரசாங்கம் உருவானது. போன சனி மீண்டும் வந்தது என்ற உணர்வுடன் மீண்டும் என்ரான் பிரச்சனை காங்கரஸிற்கே வந்தது. ஒப்பந்தம் கையெழுத்தானபோது கணக்கிட்டதைப் போல் ஒரு யூனிட்டிற்கு ரூ2.40 என்ரானுக்கு செலுத்த வேண்டும் என்பது பொய்யாகி யூனிட்டிற்கு ரூ7.20 செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மின்சார வாரியம் மட்டுமல்ல மகாராஷ்ட்ர அரசே போண்டியாக வேண்டிய நிலை ஏற்பட்டது. மின்வாரியத்திற்கு முதல் ஆண்டில் மட்டும் 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.

போண்டியாகும் மகாராஷ்ட்ர மின்வாரியம்:

ஏற்கனவே குறிப்பிட்டபடி முதல் கட்ட மின்நிலையத்தின் உற்பத்தி திறன் 740 மெ. வாட். ஓப்பந்தப்படி அடிப்படை இயங்குபாரம் 625 மெ.வாட். உச்சகட்ட இயங்குபாரம் 695 மெ.வாட். மூலதனச் செலவானது 625 மெ.வாட் உற்பத்தி செய்தால் யூனிட்க்கு எவ்வளவு வருமோ அதையே 695 மெ. வாட் உற்பத்தி செய்த போதும் வசூல் செய்தது. சிவசேனா அரசு மறு பேச்சுவார்த்தைக்குப்பின் மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டம் 489 கோடியாக குறைக்கப்பட்டது என்று வாதிட்டாலும் டாலர் விலை ரூ32 லிருந்து ரூ36 ஆக உயர்ந்ததால் நஷ்டம் ஆண்டுக்கு 551 கோடியாக உயர்ந்தது. மின்வாரியத்தின் வருமானத்தில் 52 சதமானம் 20 சதம் மின்சாரத்தை மட்டுமே கொடுத்த என்ரானுக்கே போய்ச் சேர்ந்தது. திரு பிரயாஷ் தலைமையில் இளம் நிபுணர்கள் குழு ஆராய்ந்ததில் என்ரானால் வருடத்திற்கு ரூ3000 கோடி நஷ்டம் வரும் என்று மதிப்பிடப்பட்டது. இது இரண்டாம் கட்டமும் உற்பத்தியைத் துவங்கினால் ஆண்டுக்கு ஏற்படும் ரூ1600 கோடி நஷ்டத்தையும் உள்ளடக்கியது.

மின் கொள்முதல் ஒப்பந்ததத்தில் 83 சத இயங்குபாரம் என்பதும் மிக மோசமான விளைவை ஏற்படுத்தியது. மகாராஷ்ட்ர மின்வாரியத்தின் மொத்த மின்விநியோக கொள்ளவு 7000 மெ. வாட். இரண்டடாம் கட்டம் உற்பத்தியை துவங்கினால் என்ரான் மட்டும் 2000 மெ. வாட்டிற்கு மேல் கொடுக்கும். குறைந்த கட்ட இயங்கு பாரமானது 60 சதமாக இருக்கும் பொழுது விநியோகிக்கும் மின்சாரத்தில் 50 சதத்திற்கு மேல் என்ரானுடையதாகவே இருக்கும். என்ரானுக்கு 83 சத இயங்குபாரம் கொடுக்க வேண்டுமானால் மலிவான விலையில் உற்பத்தி செய்யும் இதர மின்நிலையங்களை நிறுத்த வேண்டும். மறுபேச்சு வார்த்தைக்குப்பின் எரிபொருள் திரவமாக்கப்பட்ட இயற்கைவாயுவாக மாற்றப்பட்டது; இது முந்தைய எரிபொருளான நாப்தாவைவிட மலிவானது என்று வாதிடப்பட்டது. இது உண்மையே. எனினும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய தேவையான துறைமுக கட்டமைப்புக்கும் அதை திரவமாக நீடித்திருக்க தேவையான கட்டமைப்புக்கும் தேவையான மூலதனம் எரிபொருள் செலவில் சேர்க்கப்படும். இது எரிபொருளை உபயோகித்தாலும் உபயோகிக்காவிட்டாலும் கொடுக்க வேண்டும். இதன்விளைவாக மின்வாரியமானது தன்னுடைய வருமானமான ரூ12500 கோடியில் என்ரானுக்கு மட்டும் முதலாமாண்டில் மட்டும் ரூ 6500 செலுத்தியது. மின்வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் மின்வாரியமானது தன்னுடைய 10000 மெ வாட் மின்உற்பத்தி நிலையங்களை என்ரானுக்கு கொடுக்க வேண்டியதிருக்கும்.

அன்னிய நேரடி மூலதனம் என்ரான் வழியாக வந்ததா?

மன்மோகன்சிங் சித்தாந்தப்படி இந்தியாவிற்குள் இந்த ஒப்பந்ததத்தால்அன்னிய நேரடி முலதனம் வந்ததா என்றால், சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் என்றே சொல்ல வேண்டும். என்ரானின் இரண்டு கட்டங்களையும் சேர்த்தால் ரூ10000 கோடி மூலதனம் வருகிறது. இதில் 60 சதத்தை என்ரான் கொண்டுவந்தால் 6000 கோடி அன்னிய மூலதனம் கிடைத்திருக்கம். இதற்கு எதிராக, சர்வதேச சந்தையில் மாறிவரும் நாணய மதிப்பும் ஏறிவரும் எண்ணெய் விலையையும் சேர்த்தால் மின்நிலையத்தின் ஆயுட்காலமான 20 வருடத்தில் ரூ1,00,000 கோடி அன்னியச் செலவாணியை எரிபொருள் வாங்குவதற்கே செலவிட்டிருக்க வேண்டும். என்ரான் எதுவும் கொண்டு வரவில்லை என்பது வேறு விஷயம். நிலமை மோசமாகிக் கொண்டே போனதால் மின்வாரியமானது நஷ்டத்தை தாங்கமுடியாமல் அரசை நிர்பந்திக்க ஆரம்பித்தது. எனவே தேஷ்முக் அரசானது கோட்பாலே என்பவர் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை, என்ரான் பிரச்சனை பற்றி ஆராய நியமித்தது. கோட்பாலே கமிட்டியின் கண்டுபிடிப்புகள் என்ன என்பதை அடுத்த வெளியீட்டில் பார்க்கலாம்.

No comments: