December 27, 2008

ஒரு புதன்கிழமை

ஒரு புதன்கிழமை. இது 3 மாத்திற்கு முன் வெளிவந்த இந்தித் திரைப்படம். தற்போது இதன் இயக்குனர் நீரஜ்பாண்டேக்கு இப்படத்தின் மூலம் இயக்குனர் சாந்தாராம் விருது கிடைத்திருக்கிறது. இதன் கரு தீவிரவாதம் பற்றியது. இதன் வடிவம் தமிழின் ‘இந்தியன்‘ திரைப்படத்தையும், ஜப்பானின் ‘புல்லட் ட்ரெயின்‘ படத்தையும் கலந்த ஒரு மசாலா வடிவம். சில மசாலாப் படங்கள் மக்கள் மனதை கவ்விப்பிடித்து, பிற்போக்கான அல்லது மேம்போக்கான பார்வையை மக்கள் மனதில் ஆழமாக பதியவைக்கும் திறனுடையவை. இந்த ரகங்களில் தமிழில் வந்த ‘ஜென்டில்மேன்‘ படத்தை உதாரணமாகக் கூறலாம். நமது நாட்டில் தொழில்கல்வியும், மருத்துவ கல்வியும் தனியார்மயப்படுத்தி தெருக்களில் தொழிற்கல்வி பட்டங்கள் கூவி விற்காத குறையாக வியாபாரப்படுத்தப்பட்ட கல்விமுறையை திணித்தது உலகமயமாக்கல். ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் வாயிலாக, இடஒதுக்கீட்டின் மூலம், திறமைசாலிக்கு கல்வி மறுக்கப்படுவதாகவும், இந்த கொள்கையை அமல்படுத்தும் முறை மோசம் என்றும் கூறி கல்வியை வியாபாரமயமாக்கி சமூகத்தை காயப்படுத்திய உலகமயமாக்கல் கொள்கையை மூடி மறைப்பதோடல்லாமல் தனியார்மயமானால் இடஒதுக்கீடு இருக்காது; திறமைசாலிகள் படிக்க முடியும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது இப்படம். அதுவும் உலகமயமாக்கல் அமல்படுத்தித் துவங்கிய காலகட்டத்தில் வந்தது. இதன் வரிசையில் தற்போது வந்தததுதான் ‘ஒரு புதன்கிழமை‘ திரைப்படம்.

இப்படத்தின் சிறப்பம்சம்: இதில் காதல் கிடையாது, பாடல்கள் கிடையாது, சண்டை கிடையாது. எனவே இது மசாலப்படமல்ல என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அனுபம் கேர் மற்றும் நஸிருதீன் ஷா ஆகிய நடிகர்களின் பாத்திரமே பிரதானமானது. ஓய்வு பெற்ற மும்பய் நகர போலீஸ் கமிஷன் தன்னுடைய கடைசி நாள் பணியின் அனுபவம் பற்றி கூறுவதாக கதையைத் துவங்குகிறார். பெரியவர் ஒருவர் (நஸிருதீன் ஷா) மும்பய் போலீஸ் கமிஷனர் (அனுபம் கேர்) அலுவலகம் முன்பிருக்கும் காவல் நிலையத்தில் தன்னுடைய பர்ஸ் தொலைந்துவிட்டதாக கூறி புகார் கொடுக்கச் சென்று அங்கு வெடிகுண்டு வைத்துவிட்டுத் திரும்புகிறார். பின்னர் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு உயரமான கட்டிடத்தின் மேல்தளத்தில் உட்கார்ந்து கொண்டு, நவீனக் கருவிகளின் துணையுடன் போலீஸ் கமிஷனரைத் தொடர்பு கொண்டு தான் மும்பயில் முக்கியமான இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நான்கு முக்கிய முஸ்லீம் தீவிரவாதிகளை விடுவிக்க முன்வந்தால், குண்டு வைத்த இடங்களை சொல்வதாகவும் கூறுகிறார். அசட்டை செய்த போலீஸ் கமிஷனரிடம் ‘நான் குண்டு வைத்ததை நம்பவில்லை என்றால், உங்கள் அலுவலகம் முன்பிருக்கும் காவல் நிலையத்தில் குண்டு வைத்திருக்கிறேன்; அரை மணி நேரத்தில் கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுகிறார். கமிஷனரிடம் பேசும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டின் சிம்கார்டை பயன்படுத்துவதால் இவருடைய இடத்தை மோப்பம் பிடிப்பதற்கு காவல்துறைக்கு சிரமப்படுகிறது. ஒரு தனியார் தொலைக்காட்சி நபரை தொடர்பு கொண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றால், உங்களுக்கு நேரடி ஒளிபரப்ப செய்ய வேண்டிய பரபரப்பான செய்தி கிடைக்கும் என்று கூறவே, அத்தொலைக்காட்சியும் உபகரணங்களுடன் அங்கு சென்று நேரடி ஒளிபரப்பை துவங்குகிறது. மொட்டை மாடியில் உட்கார்ந்திருக்கும் பெரியவருக்கு அங்கு நடப்பது தொலைக்காட்சிமூலம் தெரியவர, தன்னுடைய அடுத்த காயை நகர்த்துகிறார் பெரியவர்.

இப்பொழுது தான் குறிப்பிடும் நான் முஸ்லீம் தீவிரவாதிகளை தான் சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து விட்டால், குண்டு வைக்கப்பட்டிருக்கும் இடங்களை கூறுவதாக கூறுகிறார். கமிஷனரும் முதலமைச்சரும் கூடி பேசி முடிவெடுத்து நான்கு தீவிரவாதிகளை விடுவிப்பதாகவும், பெரியவர் சொல்லும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு வருவதாகவும் உறுதியளிக்கின்றனர். இதற்கிடையில், பெரியவரின் தொலைபேசி அழைப்புகளை வைத்து அவரை கண்டுபிடிக்க ஒரு கணிணி சங்கேத நிபுணரை (Hacker) அழைத்து பணியில் ஈடுபடுத்துகின்றனர். ஆரம்பத்தில் புகார் வாங்கிய காவலரின் உதவியுடன் பெரியவரின் படம் வரையப்படுகிற்து. தீவிரவாதிகள், பெரியவர் கூறும் இடத்திற்கு கொண்டு வரப்படுகிறார்கள். அங்கு உள்ள மேடையில் அவர்களை விட்டுவிட்டு காவலரை நகரச் சொல்கிறார். பிறகு ஒரு தொலைபேசி அந்த மேடையின் கீழ் ஒலிக்கிறது. தொலைபேசியை தீவிரவாதி ஒருவன் எடுத்து பேசு பித்தானை அழுத்தியவுடன் குண்டு வெடித்து மூவர் இறந்து போகிறான். நான்காவது ஆளை பிடித்து வைத்துள்ள காவரிடமும் காவல்துறையுடனும் பெரியவர் ஒரு நீண்ட உரை நிகழ்த்துகிறார். பல வெடிகுண்டு சம்பங்களுக்கு பொறுப்பானவர்களை அரசு ஒன்றுமே செய்யவில்லை. எனவே தான் திட்டம் தீட்டி அவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் மீதமிருக்கும் ஒருவரையும் நீங்கள் சுட்டுக் கொன்றால், குண்டு வைத்திருக்கும் இடங்களை கூறுவதாகவும் கூறுகிறார். அந்த தீவிரவாதியும் சுடப்படுகிறான். பெரியவரின் வீர உரையைக் கேட்ட கணிணி நிபுணரும் அவர் இருக்குமிடம் பற்றி தான் கூறியதாக சொன்ன தகவல் தவறு என்று கூறி பெரிவர் நல்ல மனிதன் என்று கூறுகிறார். பெரியவரின் படத்தை வரைவதற்கு உதவிய காவலரும் படத்தில் உள்ளவர் போன்று அந்த மனிதர் இருக்க மாட்டார் என்று பின்வாங்குகிறார். பெரியவர் கமிஷனர் இருக்குமிடத்திற்கு விரைகிறார், அதற்குள் பெரியவர் அவருடைய உபகரணங்களை அழித்துவிடுகிறார். கமிஷனர், பெரியவரை பார்த்து சாதாரணமாக பேசிவிட்டு கதையை முடிக்கிறார்.

இதை ஒரு மசாலாப்படம் என்று கூறுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கிறது. படத்தில் பெரியவர் தன்னை ஒரு சாதாரண மனிதன் (Common Man) என்றும் தன்னுடைய குரல் சாதாரண மனிதனின் குரல் என்றும் கூறுகிறார்; ஆனால் அவரின் செய்கைகள் பராக்கிரமங்கள் எதுவும் சாதரண மனிதனின் நடவடிக்கைக்குள் வராது. கமிஷனரிடம் பேசும் பெரியவரின் நீண்ட உரையானது வீடியோ காட்சிகளாக காண்பிக்கப்படுகிறது. அதில் பெரியவர் ஒரு சிறிய கைப்பெட்டியை வைத்துக் கொள்டு மும்பய் புறநகர் ரயிலில் பயணம் செய்பவராக காண்பிக்கப்படுகிறார். இது சாதராண மனிதன் தான். ரயில் குண்டு வெடிப்பின்போது பாதிக்கப்ட்டவர்களின் கதையை அந்த உரையில் கூறுகிறார். ஆனால் ஒரு சாதாரண மனிதன் பல்வேறு நாடுகளில் இயங்கும் தொலைபேசி நிறுவனங்களின் சிம்கார்டுகளை பெற்றதெப்படி? ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பையை காவல்நிலையத்தில் வைக்குமளவிற்கு துணிச்சல் எப்படி வந்ததது? சுhதரண மனிதன் ஜுஹு பீச் விமானதளத்தில் ஒரு மேடையைப் போட்டு அதனடியில் வெடிகுண்டு வைத்துச் செல்வது இயலாத காரியம். சாதாரண மனிதன் போலீஸ் கமிஷனரிடம் பேரம் பேசி மிரட்டல்காரனாகவும் இருக்க முடியாது. அதுவும் வீட்டிலிருந்து மனைவி தொலைபேசியில் அழைத்து, வீட்டிற்கு திரும்பும் பொழுது தக்காளி வாங்கிக் கொண்டு வரும்படி கூறும் அளவிற்கு சாதாரண மனிதன்.

படத்தில் காதல் பாட்டு சண்டையெல்லாமில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றதற்கு புல்லட் ட்ரெயின் உத்தி பயன்பட்டிருக்கிறது எனினும் இது பாராட்டப்பட வேண்டியதே. எனினும் படத்தின் மையக் கருவான தீவிரவாதம் பற்றிய புரிதல் மிகவும் கோளாருடையது; ஆபத்தானது. தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள் பற்றிய எந்த ஆய்வும் தேடலும் படத்தில் இல்லை; பெரியவரின் உரையிலும், குண்டு வைப்பதற்கு தீவிரவாதிகள் சொல்லும் நியாயங்களே அவர்களை கொல்வதற்கும் வைக்கப்படுகிறது. நீண்டகாலம் நியாயம் கிடைக்காத குற்றத்திற்கு, தன்னைப் போன்ற சாதராண மனிதன் நியாயம் வழங்க முன்வந்திருப்பதாக கூறுவதை ஏற்றுக் கொண்டால், இதே போனற் வாதம் குஜராத் படுகொலைகள், மற்ற வகுப்பு கலவரங்கள், ஒரிஸா படுகொலைகள் செய்த யாரும் தண்டனை பெறவில்லை என்பதையும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் தீவரவாதிகள் தரப்பில் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும். பெரியவர் நிகழ்த்தும் உரைகளில் இதுவரை நடைபெற்ற அடுக்கடுக்கான குண்டு வெடிப்பு சம்பவங்களில் மாலேகான் உள்ளிட்ட இந்து தீவிரவாதிகள் மூலம் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களையும் சேர்த்துக் கொள்கிறார். ஆனால் அவர் பழிவாங்க முன்வந்திருப்பது நான்கு முஸ்லீம் தீவிரவாதிகள் மட்டுமே. ஏன் ஒரு பிரக்ஞ்யா தாக்கூர் சேர்க்கப்படவில்லை? படம் எடுக்கும் பொழுது இந்துத் தீவிரவாதிகளும் குண்டு வைத்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகவில்லை என்றாலும் அனைத்து குண்டு வெடிப்புகளும் முஸ்லீம் தீவரவாதிகளே காரணம் என்று போகிற போக்கில் கூறுவதுதான் ஆபத்தானது. தற்போது இந்துத் தீவிரவாதம் அம்பலமான நிலையிலும் தற்போது எந்த இயக்குனராவது பிரக்ஞ்யா தாக்கூர் போன்றவர்களை மையமாக வைத்து படம் எடுக்க முடியும்? எடுத்தாலும் படத்தை ஓட விட்டுவிடுவார்களா? அதற்கு சாந்தாராம் விருது கிடைக்குமா? அப்பொழுது விசாரணை முடியும்வரை குற்றவாளி என்ற தீர்ப்பு கூறமுடியாது என்ற வாதமும், மனித உரிமை குரலும் ஓங்கி ஒலிக்கும். மும்பய் நகரின் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சாதாரண மனிதன் பற்றி பேசும் இயக்குனர், இந்து வகுப்புவாதிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்ட இன்னொரு ரக சாதாரண மனிதர்கள் பற்றி ஏன் கவலைப்படவில்லை? அது கதையின் கரு இல்லையென்றாலும் இவரின் படைப்பு மக்களிடத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். இது நமது நாட்டில் வாழும் இன்னொரு சாரார் பிரச்சனைகளை முற்றிலுமாக நிராகரித்து அவர்கள் மனிதர்களே இல்லையென்று புறமொதுக்கும் கயமைத்தனமே இப்படம் ஏற்படுத்தப் போகும் தாக்கமாகும். பிடிபட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா இல்லையா என்பதை விசாரணையால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் “சாதாரண மனிதன்“ அவரே முடிவு செய்து அவரே தண்டனை வழங்குவது என்பது கட்டை பஞ்சாயத்தைவிட கேவலமானது. மாலேகான் குண்டு வெடிப்பு நடத்தியவர்களும் இந்த “சாதாரண மனிதன்“ கூறுவதையேதான் கூறுகிறார்கள். பல நேரங்களில் சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள் என்பது கசப்பான உண்மையே. அப்படிப்பட்டவர்கள் பட்டியலில் மோடி, தெகாடியா, அத்வானி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் கையில் அதிகாரம் இருக்கும் பொழுது நீதி எப்படி சுயமாக இயங்க முடியும்? கலைஞன் என்பவன் பிரச்சனையை பொதுவாக பார்ப்பவனாக இருக்க வேண்டும், பிரச்சனைகளின் ஆணிவேரை தேடுபவனாக இருக்க வேண்டும். இந்த குணாம்சமில்லாத கலைஞனின் மனவினைத் திறத்தால் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை. நீரஜ்பாண்டேக்கு சினிமா அழகியல் தெரிந்திருந்தாலும் அவரது படைப்புகளால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படைப்பு மக்களை தவறான வழியில் கொண்டு செல்லும் நோக்கமுடையது.

December 6, 2008

அரசியல்மயமல்லாதாக்கலின் அரசியல் (Politics of Depoliticisation)

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; நடுத்தர வர்க்கத்திற்கு இளைத்தவன் அரசியல்வாதி. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் சகட்டுமேனிக்கு அடிவாங்குபவன் அரசியல்வாதி. அதுவும் சைபர் உலக நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசியல்வாதிகளை கேலி செய்து ஒரு மெயில் அனுப்பி விட்டால் தேன் குடித்த நரியாகி விடுவார்கள். யார் எங்கிருந்து எழுதினார் என்று தெரிந்து ஆப்பு கிடைக்கும் என்ற நிலை இல்லை என்ற தைரியத்தில். அப்படியே தேடி வந்தாலும் எனக்கு மெயில் வந்தது சும்மா ஃபார்வட் பண்ணினேன் என்று சமாளிக்கலாம் என்ற தைரியம் வேறு. இதில் பலருக்கு ஐபி அட்ரஸை வைத்து யார் அனுப்பினார்கள் என்று கண்டுபிடிப்பது எளிது என்று தெரியாது. இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள நிலை இதுதான். இந்த அரசியல்வாதிகளையெல்லாம் வரிசையில் நிற்க வைத்து சுட்டுத் தள்ளவேண்டும் என்பது பெரும்பாலான நடுத்தரவர்க்கத்தினரின் ஆசை. இந்த ஆசை நிறைவேறினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டுமா?

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலங்கையை கற்பனை செய்து பாருங்கள். இந்த ஆசையை தெள்ளத் தெளிவாக நிறைவேற்றி வைத்தவர்கள் விடுதலைப் புலிகளும், ஜனதா விமுக்தி பெருமுனா என்ற தீவிரவாத அமைப்பும். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் கமலஹாசனுக்கூட பெண்கள் அனைவரையும் கொன்று தீர்த்து விடவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற முடியவில்லை ஆனால் இலங்கையில் கிட்டத்தட்ட 1993க்கு முந்தைய அனைத்து அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டுவிட்டனர். அமிர்தலிங்கம் முதல் பிரேமதாஸா வரை அனைவரும் சாகடிக்கப்பட்டனர். ஆக இனிமேல் இலங்கையில் அரசியல்வாதிகள் தொல்லை இல்லை என்று ஆசுவாசப்பட்ட நமது நடுத்தரவர்க்கத்தினருக்கு ஆச்சரியம் தாளவில்லை, இன்னொரு புதிய தலைமுறை அரசியல்வாதிகள் ஒரு சில ஆண்டுகளுக்குள் முளைத்துவிட்டனர்; அதே கொள்கைகளோடும் அதே நடைமுறைகளோடும்!

அன்று கிளை மட்டத்திலும் வார்டு மட்டத்திலும் இருந்தவர்கள் இன்று தேசிய மட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகள். அப்படியானால் இன்று கிளைமட்டத்தில் யார் இருக்கிறார்கள்? அன்று வீட்டில் சும்மா இருந்தவர்கள் இன்று திண்ணை காலியானதும் கிளைமட்டத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். நாளை தேசிய மட்டத்தில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் மீண்டும் விடுதலைப்புலிகளால் ஒழித்துக் கட்டபடுவார்களேயானால் இன்று கிளை மட்டத்தில் இருப்பவர் நாளை தேசிய மட்டத்திற்கு வருவார். இன்று வீட்டில் சும்மா இருந்து கொண்டிருப்பவர் கிளைமட்ட அரசியல்வாதியாகிவிடுவார். நமது நாட்டிலும் இன்றுள்ள அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டினால் இலங்கையில் நடந்தது போன்று புதிய தலைமுறை அரசியல்வாதிகள் முளைத்து விடுவார்கள் என்று ஊகிப்பதில் எந்த சிரமமும் இல்லை. ஆக அரசியல்வாதிகள் என்ற இந்த பீடையை ஒழிக்கவே முடியாதா?

எது அரசியல்வாதிகளை இப்படி உருவாக்குகிறது? வெறும் மாலிக்யூல்கள் மட்டுமே மிதந்து கொண்டிருந்த இவ்வுலகில் (பிரைமோவல் சூப் என்று உயிரியல் வர்ணிக்கிறது) ஒரு கட்டத்தில் DNA ஆக உருமாறி உயிர் தோன்றியதைப் போல், சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து அரசியல்வாதிகள் எப்படி உருவெடுக்கிறார்கள்? DNA உருவானதிற்கான புறச் சூழ்நிலை என்ன என்று ஒரு (விஷயம் தெரிந்த!) உயிரியல் மாணவனால் கூறமுடியும். ஆனால் அரசியல்வாதி உருவாவதற்கான சூழ்நிலை என்ன என்று இந்த சைபர் உலக நடுத்தர வர்க்கத்தினரால் கூற முடியாது ஏனென்றால் அந்த திசையை நோக்கி சிந்திப்பது என்ற ஸ்மரணையே அவர்களுக்கு கிடையாது.

இதோடு ஒட்டிய இன்னொரு கருத்தும் சைபர் உலக நமது நடுத்தர மக்கள் மத்தில் உலாவருகிறது. நம்மைப் போன்றவர்களுக்கு ஜனநாயகம் எல்லாம் சரிப்பட்டு வராது. சர்வாதிகாரம்தான் வேண்டும். ஒரு நல்ல நாட்டுபற்றுடைய சர்வாதிகாரி வேண்டும். அதுவும் மிலிட்டரி ஆள் இருந்தா தான் கட்டுப்படுத்த முடியும். அது அது அதுபாட்டுக்கு இயங்கும். எந்த ஊழலும் இருக்காது. அவனவன் அவன் வேலையைப் பார்த்துட்டுப்போவான். சும்மா நடுத்தெருவில் மேடை போட்டு கத்திக்கிட்டிருக்க முடியாது. பாருங்க நம்ம இந்திரா காந்தி அம்மையார் எமர்ஜென்ஸி கொண்டு வந்தார்கள். என்னதான் சர்வாதிகாரம் என்று சொன்னாலும் ரயில் நேரத்திற்கு ஒடினது. கவர்னர் மாளிகையில் பைல்கள் பைசலாகி பறந்தன. இதுவும் அரசியல்வாதிகளை ஒழித்து கட்டிவிட்டு ராஜாங்கம் பண்ண வேண்டும் என்ற ஆசைதான். அதுவும் ரஜினி படத்தை பார்த்து, பார்த்து, யாராவது நமக்காக சண்டை போட்டு எல்லவற்றையும் சரி செய்து விடமாட்டார்களா, நாம் பாட்டு நமது வேலையை பார்த்துக் கொண்டே அவ்வப்போது டிவியை பார்த்துவிட்டு ஒன்னு ரெண்டு இமெயில் அனுப்பிவிட்டு பொழுதைக் கழிக்க முடியதா என்ற நப்பாசையால் வந்தது இந்த ஆசை.

இதற்கும் உதாரணமாக திகழுகிறது நமக்கு வடமேற்கு அண்டை நாடு. நமக்கு 12 மணிநேரம் முன்னால் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று, முடிந்து விட்ட 61 ஆண்டுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சர்வாதிகாரம்தான். அதுவும் ராணுவ சர்வாதிகாரம். அதிகார பரிணாம வளர்ச்சி எப்படியிருக்கிறது? அரசியல்வாதிகள், ராணுவம், உளவு, சண்டியர்கள் ஆகிய நான்குமுனை அதிகார மையங்கள். எதன் கீழும் எதுவும் இல்லை. சண்டியர்களை கட்டுப்படுத்த உளவுத்துறை நினைத்தால் ராணுவத்துடன் சண்டியர்கள் கூட்டு சேர்ந்து உளவுத்துறையை பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். அரசியல்வாதிகள் ராணுவத்தை கட்டுப்படுத்த நினைத்தால் மற்ற மூன்றுபேரும் ஒன்று சேர்ந்து அரசியல்வாதிகளை தீர்த்துக் கட்டிவிடுவார்கள் (சமீபத்திய உதாரணம் பெனாஸிர்).

அரசியல் என்றால் என்ன புரிதலில் உள்ள போதாமையால் (inadequacy) உருவாவதுதான் இத்தகைய எண்ணப் போக்குகள். நடைமுறையில் இருக்கும் கட்சி அரசியல் என்பதிலிருந்து மாறுபட்டதுதான் உண்மையான அரசியல். குறிப்பிட்ட மக்கள் குழுக்கள் தங்களுடைய நலனை முன்னிலைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே அரசியல். இத்தகைய மக்கள் குழுக்கள் பெரும்பாலும் பொருளாதார அடிப்படையில் அமைவதுதான் இயற்கை. ஓவ்வொரு நாட்டு அரசியலும் இந்த திசையில் மெல்ல மெல்ல பயணித்து வருகிறது. எனினும் அனைத்து அரசியல் குழுக்களும் தன்னுடைய பொருளாதார நலனை நேரடியாக முன்னிறுத்தி இயங்க ஆரம்பித்தால் ஒருவிதமான சமநிலை (Equilibrium) விரைவில் ஏற்பட்டுவிடும். அந்த சமநிலையானது ஒவ்வொரு குழுவின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கும். எனவேதான் இந்த பலத்தில் மாற்றம் எற்பட்டாலொழிய ஒரு குழுவானது மற்றொரு குழுவைவிட அதிக பொருளாதார பலனை அடைய முடியாது. ஓவ்வொரு குழுவும் அது பிரதிநிதித்துவ படுத்துவதாக இலக்கு வைத்துள்ள மக்கள் குழுக்களை தன்னுடைய நடவடிக்கைகளுக்குள் உள்ளிழுப்பதே அரசியல்மயப்படுத்துல். இந்த அரசியல்மயப்படுத்துதலே அக்குழுவின் பலத்தை தீர்மானிக்கும்.

தற்போது நடைபெற்று வரும் தள்ளுமுள்ளுகள் மேல் மட்டத்தில் ஒவ்வொரு குழுவும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் போல் தெரிந்தாலும், அடிமட்டத்தில் பொருளாதாரக் குழுக்களின் போராட்டமே நடைபெற்றுவருகிறது. அடிமட்டத்தில் நடைபெறும் போராட்டத்தை வெளியில் தெரியாமல் தடுப்பதற்கான ஏற்பாடே மேடை அரசியல் உள்ளிட்ட அம்சங்கள்; இவற்றால் மக்கள் வாயைப் பிளந்து பார்க்க வைக்கும் காட்சிகளான சவால்கள், அறிக்கைகள், பாதுகாப்பு பந்தாக்கள், விமானப்பயணங்கள் போன்ற அம்சங்கள் உண்டு, இதையும் தாண்டி துருத்திக் கொண்டு அடிமட்ட விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்ததால், depoliticise செய்வதற்கான ஏற்பாடும் உள்ளது.

சாக்கடை அரசியலுக்கு மாற்று தன்னார்வக்குழுக்கள் (NGO)என்ற கோட்பாடும் தற்போது முன்வைக்கப்படுகிறது. இந்தத் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடானாது, அடிமட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாரதாரக் குழுக்களின் போராட்டத்தில் அக்குழுக்களின் பலங்களில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அதற்காகவே இவைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒருவிதத்தில் இவைகள் depoliticisaion போக்கிற்கு பங்களிக்கின்றன. ரஜினிப்பட பார்வையாளர் போல் யாராவது வந்து எதாவது நமக்காக செய்துவிடமாட்டார்களா என்ற நப்பாசை இல்லாத ஒரு நடுத்தரவர்க்க பிரிவினர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அரசியல் மேல் அசூயை இருக்கிறது. இவர்களுக்கு வடிகாலாக உள்ளதுதான் NGO. இதுவும் இல்லாவிட்டால் பொறுமை மீறி இவர்களும் அரசியலுக்கு வந்துவிட்டால் அடிமட்டத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சக்திகளின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தின் விளைவே NGO ஏற்பாடு. NGOக்களும் Micro Levelலில் சிறு மாற்றங்களை உண்டாக்கி ஆத்ம திருப்தி அடைந்து விடுவார்கள். Macro Levelல் எந்த மாற்றமும் ஏற்படாமல் Status quo maintain ஆகிவிடும்

Depoliticising ஏற்பாட்டிற்குள் ஏற்கனவே அடைந்துவிட்ட சமநிலையை மாற்றியமைப்பதை தடுக்கும் நோக்கமும் உள்ளடங்கியிருக்கிறது. அரசியல் ஒரு சாக்கடை dirty politicians போன்ற நடுத்தர வர்க்க கருத்தியல்கள் depoliticisation ஏற்பாட்டிற்கு உதவிகரமாக உள்ளது. ஏற்கனவே அடைந்துவிட்ட சமநிலை எந்த பொருளாதாரக் குழுவிற்கு சாதகமாக இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்தால் புரிந்துவிடும். ஆனால் இந்த depoliticisation என்ற போக்கானது நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டுமே பொருந்துகிறது. இவர்களே சமூகத்தில் கருத்தியல்கள் ஏந்திச் செல்பவர்கள். Concernt Manufacturers ஆனால் இதையும் மீறி அடித்தட்டு மக்களின் அரசியல் பங்கெடுப்பு என்பது அதிகரித்து வருகிறது. ‘சாக்கடை அரசியலை‘ நடுத்தர வர்க்கம் புறக்கணித்தாலும் மக்கள் திரள் புறக்கணிக்கத் தயாரில்லை. இன்றுவரை நடைபெற்றுவந்திருக்கின்ற தேர்தல்களில் மக்கள் பங்கெடுப்பு என்பது 60 சதத்திற்கு மேலும் இடதுசாரிகள் பலமாயுள்ள மாநிலங்களில் 75 சதத்திற்கு மேலும் இருந்திருக்கிறது. எவ்வளவு அச்சுறுத்தல் இருந்தாலும் காஷ்மீர் மாநிலத்தில வாக்குப்பதிவு 60ஐ தாண்டிவிட்டது. பொருளாதார கோரிக்கைகளை முன்னெடுத்து செல்லும் போக்கின் பலமான செய்தியே இந்த பெருந்திரள் மக்கள் பங்கெடுப்பு.

இதை மட்டுப்படுத்த Depoliticisation ஏற்பாடும் பலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் ஊடகங்களில் வரும் கட்டுரைகளும், சைபர் உலக இமெயில் சங்கலிகளும். குறிப்பாக மந்திரிகள் செய்யும் செலவுகள், பாராளுமன்றம் நடத்த ஆகும் செலவு விஐபிகளுக்கான பாதுகாப்பு செலவுகள் என்பதை absolute termல் கோடிகளில் காண்பித்து சில ஆயிரங்களைக் கூட பார்க்காத சாதாரண மக்களை கோடிகளில் கணக்கு காட்டினால் தெண்டச் செலவுகள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கும் ஏற்பாடும் இதற்குள் உள்ளடங்கியிருக்கிறது. நமது நாட்டின் மொத்த பட்ஜெட் தொகையுடனோ, உள்நாட்டு மொத்த உற்பத்தியுடனோ இந்த தொகைகளை ஒப்பீடு செய்தால் இவை அனைத்தும் சொற்பத் தொகைகளே. அரசியல்வாதிகள் பந்தாக்களும் தெண்டச் செலவுகளையும் நியாயப்படுத்த முடியாது என்றாலும், இந்த பந்தாக்களாலும் தெண்டச் செலவுகளாலும் நொந்து போயிருக்கின்ற மக்களுக்கு இந்த தெண்டச் செலவுகள் சில கோடிகளில் உள்ளது என்ற நம்பர்களை கொடுத்தால் மேலும் கோபம் அதிகமாகி depoliticisaiton போக்கு துரிதப்படும் என்ற உள்நோக்கமும் இதற்குள் இருக்கிறது என்பதையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டும்.

நாம் அறிந்தோ, அறியாமலே பிரமுகர்களாக வளர்ந்துவிட்ட அரசியல்வாதிகள் அவர்கள் உதிர்க்கும் கருத்துக்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென்றால் அதிக பணம் செலவழித்து உயிரை பாதுகாப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. எல்டிடியினருக்கு எதிராக கருத்துக் கூறிக் கொண்டிருக்கிற ஜெயலலிதாவையோ சு.சாமியையே அவர்களின் குண்டுகளுக்கு இரையாகும்படி அனுமதிக்க முடியாது. பஞ்சாப் தீவிரவாதம் முழுவீச்சில் இருந்தபொழுது ஹரிகிஷன்சிங் சுர்ஜித் என்ற கம்யூனிஸ்ட் தலைவர் அதற்கு எதிராக கடுமையாக குரல் எழுப்பியதால் அவரது உயிரை எடுக்க நடைபெற்ற முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு காரணம் அவருக்கு இஜட் பிரிவு பாதுகாப்பு கொடுத்ததால்தான் என்பதை மறுக்கமுடியாது. காஷ்மீரில் முகமது தாரிகமி உள்ளிட்ட அரசியல்வாதிகள் இஜட் பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு இருப்பதால்தான் இன்றுவரை உயிரோடு இருக்க முடிகிறது. இந்த இரு அரசியல் வாதிகளும் சென்னை வந்தபொழுது வெறும் இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்களை மட்டும் வைத்துக் கொண்டு சென்னை தெருக்களில் உலாவந்ததை காணமுடிந்தது. இதே நபர்கள் அவர்கள் மாநிலங்களுக்குச் சென்றால் கடுமையான பாதுகாப்புடனே நடமாட முடிந்தது. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மக்களிடம் அடையாளம் காட்டாமல் பந்தா அரசியல்வாதிகளை மட்டுமே படம் பிடித்து அசூயையை உருவாக்கும் ஏற்பாட்டை நம்மால் ஏன் புரிந்து கொளள முடியவில்லை. இதற்கான செலவுகளை எல்லாம் வெட்டி, அவர்கள் செத்தால் சாகட்டும் என்று விட்டு விட்டால் அண்டை நாட்டில் உள்ளது போல் சண்டியர்கள் ஒரு அதிகாரமையமாக உருவெடுப்பார்கள். இதை சாதாரண மக்களும் விரும்பவில்லை. பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் விரும்பவில்லை, ஒருவேளை இவர்களுக்கு தேவைப்பட்டால் தங்களுக்கு கட்டுப்பட்ட சண்டியர் அதிகார மையத்தை உருவாக்கிவிடுவார்கள் என்பதிலும் நாம் அண்டை நாட்டு உதாரணத்திலிருந்து கற்றுக் கொள்ளமுடியும். ஆனால் சண்டியர் அதிகார மையம் உருவாவதை நாம் அனுமதிக்க முடியாது ஏனென்றால் அது பொருளாராக் கோரிக்கைளுக்கும் Empowermentக்குமான போராட்டம் அடிமட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பின்னுக்குத் தள்ளி, பொருளாதார மக்கள் குழுக்களின் பலத்தை மாற்றியமைக்கும் தன்மைகொண்டதாகவே இது அமையும்.