December 3, 2007

என்ரான் ஒப்பந்தமும் 123 ஒப்பந்தமும்-5

கழுதை விளையாட்டு

சீட்டு விளையாட்டில் 'கழுதை' என்று ஒரு விளையாட்டுண்டு. ஆடுபவர்கள் தங்களிடமுள்ள கழுதைச் சீட்டை அடுத்தவரிடம் தள்ளிவிட முயற்சிப்பார். இறுதியில் யாரிடம் கழுதை அதிகமாக இருக்கிறதோ அவர் தோல்வியுறுவார். என்ரான் ஒப்பந்தமும் மீண்டும் கழுதைச் சீட்டு மாதிரி காங்கிரஸ அரசாங்த்திடமே வந்துவிட்டது. என்ரான் தன்னுடைய முதல் கட்ட நிர்மாணப் பணிகளை முடித்து மகாராஷ்ட்ர மின்வாரியத்திடம் மின்சாரத்தை விற்க ஆரம்பித்தது. அதனுடைய "மீட்டர்" ஓட ஆரம்பித்தது. இடதுசாரிகள் மீண்டும் கூக்குரலிட ஆரம்பித்தார்கள். விளைவு மகாராஷ்ட்ர அரசு கோட்போலே என்பவர் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்ததது.

கோட்போலே கமிட்டி அறிக்கை

என்ரானுடைய விலை நிர்ணயக் கொள்கையானது நியாயமானதல்ல, தர்க்க ரீதியாதல்ல என்ற முடிவுக்கே கோட்போலே கமிட்டி வந்தது. மின்கொள்முதல் ஒப்பந்தத்தில் (Power Purchase Agreement) தலைகீழ் மாற்றம் செய்ய மகாராஷ்ட்ர அரசு முயல வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்கு என்ரான் உடன்படவில்லையென்றால், என்ரான் நிறுவனம் யாருக்கு வேண்டுமானலும் மின்சாரத்தை விற்றுக் கொள்ள அனுமதி வழங்கி, மின்வாரியத்தை என்ரான் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோட்போலே கமிட்டி கூறியது. ஏழு பேர் கொண்ட கமிட்டியில் ஒரு கருத்து வேறுபாடும் நிலவியது. என்ரான் விஷயத்தில் நடந்து போன விஷயங்கள் அனைத்தும் முட்டாள்தனமானது என்று தெரிந்திருந்தும், கையாண்டவர்கள் ஏன் இதை அனுமதித்தனர்? இதற்குள் ஒரு மாபெரும் ஊழல் அடங்கியிருக்கிறது; எனவே இதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கமிட்டியில் ஒருசாராரும், இதற்குள் சென்றால் பண்டோரா பெட்டியை திறந்த கதையாகிவிடும்; ஆகவே மேற்கொண்டு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தடைபடும் என்று மற்றொரு சாரரும் பிணங்கி நின்றனர்.

கோட்போலே கமிட்டியும் மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடியது. மின்வாரியம் இயற்கைக்கும் நடைமுறைக்கும் விதிமுறைகளுக்கும் புறம்பாக வருடத்திற்கு 930 கோடி அதிகம் செலுத்துமாறு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்தது என்று இடித்துரைத்தது. என்ரான் நிறுவனம் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதாக கூறியது. இயற்கை எரிவாயுவை திரவ நிலையில் வைத்திருப்பதற்கு ஒரு ஆலையை நிர்மாணித்து அதை இயக்க வேண்டும். இதற்கான மொத்த செலவையும் மின் கொள்முதல் ஒப்பந்ததத்திற்குள் கொண்டு வந்தது. இதைத்தவிர இயற்கை எரிவாயு திரவ ஆலையை தேவையைவிட இருமடங்கு பெரிதாக நிர்மானித்து அதன் திறனில் 50 சதம் மட்டுமே மின் நிலையத்திற்கு பயன்படுத்திக் கொண்டு மீதித்திறனை இதர நிறுவனங்களுக்கு விற்று வந்தது. எனினும் மொத்த செலவையும் மின்வாரியத்திடமிருந்து வசூல் செய்து மோசடி செய்தது என்று கமிட்டி அறிவித்தது. இதைவிட இயற்கை எரிவாயுவை கையாண்டதற்கு துறைமுகச் செலவு உள்ளிட்ட மேலும் பல செலவுகளை மூலதன மீட்பு (Capital Recovery) செலவாக வசூலித்துக் கொண்டது. இறுதியாக கோட்போலே கமிட்டியானது மற்ற செலவுகளை அதிகம் தேடாமல் நேரடியாக மட்டுமே 930 கோடி அதிகம் என்ரானுக்கு செலுத்தியிருப்பதாக கூறியது. இதைத்தவிர, இயற்கை எரிவாயு சம்பந்தமான விஷயங்களில் ஒப்பந்தத்தில் மாற்ற வேண்டும், இயங்கு பாரத்தையும் 30 - 50 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

சரத்பவார் தலைமையிலான காங்கிரஸ அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தமிது; சிவசேனை - பாஜக அரசால் மறுபேச்சு நடத்தி உறுதி செய்த ஒப்பந்தமானது, மீண்டும் காங்கிரஸ அரசாங்கத்தால் கையாளப்படும் போது மோசடி செய்யப்பட்ட தொகையை கையகப்படுத்தும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்?

தொடரப்பட்ட ரிட் மனு

நமது நாட்டு சட்டப்படி ஒவ்வொரு மின்திட்டத்தையும் மத்திய மின் ஆணையம் பரிசீலித்து தொழில்நுட்ப - பொருளாதார ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். என்ரான் விஷயத்தில் இது நடைபெறவில்லை . இதனை எதிர்த்து சிஐடியூவைச் சேர்ந்து அபய்மேத்தா மத்திய மின் ஆணையம் தன்னுடைய கடமையை செய்ய தவறிவிட்டத என்று வழக்கை தொடர்ந்தார்.

என்ரான் தூக்கிய போர்க்கொடி

கோட்போலே முடிவு தனக்கு எதிராக வரும் என்று என்ரான் நிறுவனம் "எதிர்பாராத அரசியல் நிகழ்வு" (Political Force Majure) என்று போர்க்கொடியை உயர்த்தியது. தபோல் மின்நிலையம் சம்பந்தமாக, மத்திய மாநில அரசுகளோ, தனிநபர்களோ இதர நிறுவனங்களோ இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரக் கூடாது என்று லண்டன் உயர் நீதிமன்றத்தில் 10-10-2001 அன்று ஒரு தலைபட்சமான (Ex-parte) ஒரு தடையாணையை வாங்கியது. தனக்கும் மகாராஷ்ட்ர மின்வாரியத்திற்கும் இடையிலான பிரச்சனையை இந்திய-அமெரிக்க நல்லுறவு பிரச்சனையாக மாற்றியது. இந்திய அமெரிக்க உறவு என்பது ENRON என்ற ஐந்து எழுத்தில்தான் இருக்கிறது என்று இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பிளாக்வில் மிரட்டல் விடுத்தார். வாஜ்பாய் அரசாங்கமும் மிரட்டலுக்கு அடிபணிந்து தபோல் மின்நிலையத்தில் என்ரானின் பங்குகளை நூறு கோடி டாலருக்கும் (ரூ 4500 கோடி) அதிகமாக விலைகொடுத்து வாங்குவதற்கு ஒப்புக் கொண்டு இதற்கான ஒப்பந்தம் நவம்பர் 2001 ல் வாஜ்பாய் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க பயணத்தில் கையெழுத்தாவதாக இருந்தது.

என்ரானின் மரணம்

இதற்கிடையில என்ரான் நிறுவனம் பல ஆண்டுகளாக செய்து வந்த பல மோசடிகள் அம்பலமாகி நிறுவனம் மிகக் குறுகிய காலத்திற்குள் சரிந்து விழுந்து விட்டது. நிறுவனம் மூடப்பட்டு பங்குதாரர்களுக்கு பட்டை நாமம் போடப்பட்டு விட்டது ஏனென்றால் அதன் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்து பூஜ்யத்தை எட்டிவிட்டது. இதன் தலைவர் கென்னத் லே ஜெயிலில் பிடித்து அடைக்கப்பட்டார். இந்திய மக்களும் காப்பாற்றப்பட்டனர்.

இப்படிப்பட்ட விலை உயர்வான பரிசோதனையை இந்திய அரசாங்கமானது கிட்டத்தட்ட 8 ஆண்டுகளில் செய்து முடித்தது. காரணம் முடிவெடுக்க வேண்டிய நிலையிலிருந்த மன்மோகன்சிங்லிருந்து மன்டேக் சிங் அலுவாலியா வரை ஏகாதிபத்திய சித்தாந்தத்தை சிரமேற்கொண்டு ஏற்பவர்கள். இதனால்தான் இதே போன்றதொரு பரிசோதனையை மீண்டும் நடத்த 123 ஒப்பந்தம் எனப்படும் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்பதின் வாயிலாக முயற்சிக்கிறார்கள்.